Sunday, January 8, 2012

யாழ்.இலக்கியக் குவியத்தின் “நாம்” Facebook கவிதைகள் நூல் வெளியீடு

யாழ்.இலக்கியக் குவியத்தின்நாம்” Facebook கவிதைகள் நூல் வெளியீடு


                               யாழ்.இலக்கியக்குவியத்தின் நாம்” Facebook கவிதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு 08.01.2012 அன்று காலை 9.00 மணியளவில் யாழ்.வைத்தீஸ்வரா கல்லூரி மண்டபத்திலே கவிஞர் வேலணையூர் தாஸ் தலைமையில் இடம்பெற்றது.
            மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அறிமுக உரையினை கவிஞர் நெடுந்தீவு முகிலன் நிகழ்த்தினார். இவர் தனது உரையில் இவ் இதழ் தொடர்ந்து வரவேண்டியதன் அவசியம் குறித்து விளக்கியிருந்தார். தொடர்ந்தும் வெளியீட்டுரையினை நிகழ்த்திய கலாசார உத்தியோகத்தர் ரஜீவன் யாழ்ப்பாணத்திலே இலக்கிய முயற்சிக்கு இருக்கும் ஆதரவுகள் குறைந்து வருகின்றன எனவும் இதற்கு காரணம் எம் மக்களிடையே வாசிப்பு பழக்கம் இல்லாமையே ஆகும் என்றார். மற்றும் ஈழத்து இலக்கிய முயற்சியிலே எவர் ஒருவரும் தனித்து நின்று போராட வேண்டியிருக்கின்றது எனவும் இதற்கான ஆதரவுகள் இல்லை எனவும் எடுத்து கூறியிருந்தார். ஒவ்வொரு படைப்பாளியும் இரண்டு வாசகனை உருவாக்க வேண்டும் அப்போதுதான் இலக்கியம் எழுச்சி பெறும் என்றார். தமிழின் முக்கியத்துவம் பற்றி கூறிய இவர் தமிழுக்கு மெய் பதினெட்டு எனவே தமிழ் என்றுமே இளமையானது என்றார். இங்கு காதல் கவிதைகளின் புறந்தள்ளல் இடம்பெறுகின்றது என் கூறிய இதனை உடைத்தெறிந்தே இந்த நாம் என்ற சஞ்சிகை வெளிவந்திருப்பதாகவும் இந்த முயற்சிக்கு எம் ஆதரவை நல்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
             அடுத்து நாம்” Facebook கவிதைகள் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது. சஞ்சிகையின் முதற்பிரதியை திரு.தே.தேவானந் (பணிப்பாளர், ஊடகவளங்கள் மற்றும் பயிற்சிநிலையம், யாழ்.பல்கலைக்கழகம்.) அவர்கள் வெளியிட்டு வைக்க டாக்டர் சு.நவரத்தினம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
                தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன் திரு.அர்ஜுன் இணையத்தளம் மற்றும் சமூகவலைத்தளம் என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டினை விளக்கி அதன் நன்மை தீமைகளை எடுத்துக்கூறியிருந்தார். அத்துடன் இணையத்தளத்தினை நாம் எவ்வாறு எமது இலக்கிய முயற்சிகளுக்கு பயன்படுத்த முடியும் எனவும் வேண்டத்தகாத இணையத்தளங்களை முடக்கி அதனை எவ்வாறு எமக்கு காண்பிக்காத வகையில் செய்யவேண்டுமென்பதையும் விளக்கியிருந்தார்.
               தொடர்ந்து உரையாற்றிய திரு.குணேஸ்வரன் அவர்கள் இன்றைய எம் சமூகத்தில் இணையத்தள பாவனை என்பது தப்பான ஒரு விடயமாக நோக்கப்படுகின்றது எனவும் அதனை இல்லாமல் செய்ய அனைத்து Netcafe களும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.
              சிறப்புரையாற்றிய திரு.கே.றுசாங்கன் (பணிப்பாளர், சிகரம் ஊடக இல்லம், யாழ்ப்பாணம்) அவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தினை உணர்த்திய இவர் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த போதும் அச்சு என்பது முக்கியமானதாக இருப்பதாகவும் இதனாலேயே இன்று இந்த Facebook இதழ் வடிவில் கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்றார். மேலும் கவிதைகள் முக்கியம் செய்திகளும் முக்கியம் என உணர்த்திய இவர் தமிழ் ஊடகங்களிற்கு நல்ல செய்தியாளர்களின் வருகை அவசியம் என்பதன் முக்கியத்தினை வலியுறுத்தியிருந்தார். கலைஞர்கள் இன்னும் வளர வேண்டும் என வாழ்த்தி தனதுரையினை நிறைவு செய்தார்..
              பிரதம விருந்தினர் உரையை நிகழ்த்திய திரு.தே.தேவானந் (பணிப்பாளர், ஊடகவளங்கள் மற்றும் பயிற்சிநிலையம், யாழ்.பல்கலைக்கழகம்.) அவர்கள் ஒவ்வொருவரின் படைப்புக்களும் எம் நாட்டை எம் சமூகத்தை பெருமைப் படுத்துவதாக வரவேண்டும் என்று கூறினார். இவர் ஊடகவளங்கள் பயிற்சி நிலையத்தின் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டிய இவர் இனி இவ்வாறான படைப்புக்களை வெளிக்கொண்டுவருவதற்கு  தமது ஊடகவளங்கள் பயிற்சிநிலையம் தம்மாலான முழு ஒத்துழைப்பையும் நல்கும் எனத் தெரிவித்திருந்தார்.
                 இறுதியாக கவிப்பொழுது என்கின்றநாம்கவிஞர்களின் நேரடி கவியாற்றுகையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. எமது இளம் கவிஞர்களின் இலக்கிய ஆளுமைக்கு இது சிறந்த ஒரு களமாக அமைந்த்து குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஈழத்து இலக்கியத்தினை மேலும் வளர்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி. விழா மிகவும் சிறப்பாக நடந்தது. சமூக இணையத்தளங்கள் மூலமும் இலக்கிய அறிவை வளர்த்தெடுக்கும் ஓர் ஆரம்ப கட்ட முயற்சியாக இது அமைந்துள்ளது. தொடர்ந்து இவ்வாறான ஆக்கபூர்வ விடயங்களை யாழ் இலக்கிய குவியத்துடன் சேர்ந்து நாம் முன்னெடுப்போம். வாழ்த்துகளும் நன்றிகளும்.

    திரு.தே.தேவானந் ஐயா அவர்களின் பேச்சாற்றலும் கருத்துக்களும் என்னை மிகவும் ஈர்த்தது. ஒலிபெருக்கியில் கதைப்பதால் பார்வையாளருக்கும் பேச்சாளருக்கும் இடையில் "மன இடைவெளி" கூடும் என கூறி, ஒலிபெருக்கியை வைத்து விட்டு மிகவும் எளிமையாக,அழகாக,ஆணித்தரமாக கருத்துக்களை முன் வைத்தார். யதார்த்தத்தை விளங்கப்படுத்திய விதம் அழகு. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி. சமூகத்தளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த யாழில் நடைபெற்ற முன்னுதாரணமான செயற்பாடு.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி உங்கள் இது போன்ற ஆதரவு இலக்கியகுவியத்தினை உற்சாகமாக வழிநடதது்ம்.

    ReplyDelete